சனி, 30 ஜூன், 2012

நறுவல்லி



நறுவல்லி மரம்.

நறுவல்லி

மூலிகையின் பெயர் :- நறுவல்லி.

தாவரப்பெயர் :- CORDIA DOCHOTOMA.

 .தாவரக்குடும்பம் :- BORAGINACEAE.

பயன்தரும் பாகங்கள் :- பழம், பட்டை, பிஞ்சு, இலை  மேலும் பருப்பு (விதை) முதலியனவாகும்.

வளரியல்பு :- நறுவல்லி ஒரு பூ பூக்கும் ஒரு நடுத்தர மர வகையைச் சேர்ந்தது. இந்த மரத்தை நறுவிலி என்றும் அழைப்பர். அடிமரம் உயரம் அற்றதாக வளைந்து திருகுடையதாக கரணைகள் கொண்டிருக்கும். இது இந்தியா, இண்டோமலாயா, வட ஆஸ்திலேலியா,  மேற்கு மலநேசியா, சைனா, ஜப்பான், தாய்வான், பாக்கீஸ்தான், இலங்கை, கம்போடியா, லாஸ், பர்மா, தாய்லேண்ட், வியட்னாம், இந்தோனேசியா, மலேயா, நியுஜினியா, ஆஸ்திரேலியா,  ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், மேற்குத் தொடர்ச்சி மலை, மாய்மர் காடுகள் ஆகிய இடங்களில் காணப்படும். ஆங்கிலத்தில் பொதுவான பெயர்கள்- Glue berry, Pink pearl, Bird lime tree, Indian cherry, ஆகியவை. இது வளமான மண்ணில் நன்கு வளரும். சரள் மண்ணில் வளராது. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். இது சுமார் 40 அடி முதல் 90 அடி உயரம் வரை வளரும். இந்த மரம் மென்னையாக இருக்கும். பட்டையை நீக்கி விட்டு இதில் ஈருகோலி மற்றும் பேன் சீப்புச் செய்வார்கள். மரத்தின் விட்டம்  25-50 செ.மீ. இருக்கும். மரம் சிறிது திருகிச் செல்லும். 1500 அடி கடல் மட்டத்திற்கு மேல் வளராது. மழையளவு 250-300 எம்.எம் வரை தேவைப்படும். ஓடை ஓரங்களில் நன்கு வளரும். இதன் இலைகள் ஓவல் வடிவத்தில் இருக்கும், முக்கோண வடிவிலான தனித்த மாற்றடுக்கில் அமைந்த இலைகள் காம்படி அகன்றும் முனை சிறுத்தும் காணப்படும். இலைகளை லார்வா சாப்பிடும். மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவர். பர்மாவில் இலைக்காக வளர்ப்பார்கள். கொனைகளின் இறுதியில் வெள்ளை நிறமுடைய சிறிய மலர்கள் கொத்தாகப் பூத்திருக்கம். 2 செ.மீ. குறுக்களவுள்ள முட்டை வடிவிலான சதைப்பற்றுள்ள காய்கள் கொத்தாகக் காய்த்துப் பழமாகும் போது கருப்பு நிறமுடையனவாக மாறும்.  இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இதன் அகலம் 2-3 செ.மீ. நீளம் சுமார் 10 செ.மீ. இருக்கும். பூக்கள் சிறிதாகவும், வெண்மை நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். பூ 8 எம்.எம். நீளத்தில் இருக்கும். பூக்கள் தன் மகரந்தச் சேர்க்கையால் காய் உண்டாகும். இதன் பிஞ்சை ஊறுகாய் போடப் பயன்படுத்துவார்கள். இதன் பழங்கள் 10-13 எம். எம். நீளம் இருக்கும். பழங்கள் கத்தரிப்பூ நிறத்திலும், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் பழம் சாப்பிட வழுவழுப்பாக இருக்கும். விதை 6 எம்.எம். நீளம் கொண்டவை. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பறவைகளால் விதைகள் பரவும்..

மருத்துவப்பயன்கள் :– நறுவல்லியின் தன்மை சூடும், குழுமையும் ஆகும். இதன் முக்கிய பயன் சுத்த இரத்தம் உண்டாக்கும். வண்டல் சம்பந்தமான நோய்களைக் கண்டிக்கும். கபத்தை அறுக்கும். தாகம், பித்தம் நீர்சுருக்கு, சூடு சம்பந்தமான இருமல் இவைகளை நீக்கும். குடலுக்குப் பலம் கொடுக்கும். குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு இவைகளை நீக்கும். மருந்து களினால் உணைடாகும் வேகத்தைத் தணிக்கும். பேரீச்சம் பழத்துடன் அரைத்துப் பூச பருக்களை உடைக்கும். நறுவல்லியின் செய்கைகள் யாதெனில், கார்ப்பு, துவர்ப்பு, இனிப்புச்சுவைகள், குழுமை, செரிமானத்தை வளர்த்தல் போன்றவையாகும். நறுவல்லியின் பட்டையின் பொடியும், கொட்டையின் பொடியும் கிருமி நோய், கொப்பளம், பித்தம், அக்கி, நஞ்சு, குடல் புண்கள், மார்பக மற்றும் நிறுநீர் குழாய் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.  இதன் பட்டை குடற்புழுக்களைக் கொன்று வெளியேற்றுவதோடு மலத்தைக் கட்டவும் செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது இரத்திலான அசுத்தத்தை நீக்குகின்றது. அஜீரணத்தைப் போக்குவதோடு காச்சலையும் தணிக்கின்றது. சீதபேதி, உடல் எரிச்சல், தொழுநோய், சொறிசிரங்கு ஆகியவற்றையும் குணமாக்கும். இதன் இலை காம உணர்வை மேலோங்கச் செய்யும் இயல்புடையது. வெட்டை நோய், கண்ணிலான வலி ஆகியவற்றைக் குணமாக்கும்.  இதன் பழம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு பேதி மருந்தாகப் பயன்பட்டுக் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறவும் உதவுகின்றது.  காம உணர்வைத் தூண்டுவதோடு, சிறுநீர் எளிதில் பிரியவும் உதவும். தொழுநோய், தோல்வியாதிகள், உடல் எரிச்சல், மூச்சிறைப்பு, மூட்டுவலி, வறட்டு இருமல்,  சிறுநீரகக் கோளாறுகள், தொண்டை வறட்ச்சி, மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இப்பழம் பயன்படுகிறது. 

‘நறுவிலியி லைக்கு இரைப்பு நாசம் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும் – நறுவிலியின்
தன்பழம் இரத்தபிஞ் சார்மேக முந்தீர்க்கும்
இன்புறயா வர்க்குமிசை’’
 

நறுவல்லி பழங்கள்.



--------------------------------------------(தொடரும்)
 
முத்துக்குமார் அம்பாசமுத்திரம் அவர்கள் வெளியிட்டதின் நகல். மக்கள் பயன்பெற. மிக்க நன்றி.
 
முன்னோர் வழங்கிய மூலிகை: நறுவல்லி
கூட்டுவதுங் கூட்டிப் பிரிப்பதுவும் ஒன்றொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதுங் காட்டுவதும்
காட்டி மறைப்பதுவுங் கண்ணுதலோன்
முன்னமைத்த ஏட்டினி படியென் றிரு.’’
நாம் அன்றாடம் பார்க்கும் பல தாவரங்கள் நம்மை வாழவைக்கும் மூலிகையாக இருந்து வருகிறது. உணவே மருந்து... மருந்தே உணவு... என்பதே நமது மருத்துவம். எந்த நோயாக இருந்தாலும் அதை உணவை கொண்டே தீர்க்கும் வகையில் நமது மருத்துவ முறையை முன்னோர்கள் அமைத்தார்கள். இந்தியா, இலங்கை, வடஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தானாக வளரும் மரம் நறுவல்லி. நமது நாட்டில் நறுவல்லி, நரிவிழி என்று அழைக்கப்படுகிறது.
எப்பொழுதும் பசுமையாக இருக்கும் மரம். இதன் இலைகள் பளபளப்பான நீள்வட்ட அமைப்பை கொண்டது. பழங்கள் ஆரஞ்சு நிறத்தில் வழுவழுப்பாக இருக்கும். இலை, பட்டை, பழம், விதை மருத்துவ பயன்கள் உடையவை. பழங்காலத்தில் சீப்புகள் இந்த மரத்தில்தான் செய்வார்கள். இதன் பழத்தை சுவைக்கும்போது பிசுபிசுப்பு சுவையுடன் இருப்பதால் இதை பாமரமக்கள் மூக்குசளி பழம் என்று அழைப்பார்கள். கரும வினை எனப்படும் நோய்களில் ஒன்றுதான் மூல நோய். இவர்கள் 10 கிராம் கொழுந்து இலைகளை மென்மையாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, இரவு உணவுக்கு பின் சாப்பிட்டுவர எந்த வகை மூலமானாலும் தீரும்.
இளம்பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பருவகாலத்தில் முகத்தில் தோன்றும் பருக்கள் அவர்களின் அழகை கெடுப்பதுடன் வடுக்களையும் ஏற்படத்தி விடும். இவர்கள் இலைசாற்றை முகப் பருவின் மேல் பூசினால் பருக்கட்டிகள் உடைந்து வடுக்கள் இல்லாமல் ஆறும். சிறுவர்கள், பெரியவர்கள் நடந்தால், ஓடினால் மூச்சிரைப்பு ஏற்படும் இவர்கள் இலைகளை நீரிலிட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை இருவேளை 100 மிலியாக காலை மாலை இரண்டு வேளை குடித்து வர மூச்சிரைப்பு தீரும்.
நெஞ்சில் ஏற்படும் சளி, நீர்சுருக்கு எனப்படும் சிறுநீர் பிரச்சனை, குடல் சார்ந்த நோய்கள், நீண்ட நாட் களாக உள்ள மலச்சிக்கல் ஆகியவை இந்த பழம் சாப்பிடுவதால் தீரும். ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. நீண்ட கால நோய்களுக்கு ஆங்கில மருந்தை பயன் படுத்தினால் தீரும் என்று அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் அதுவே பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நோயை உண்டாக்கும். முக்கியமாக உடலில் தேவையற்ற வெப்பத்தை அதிகரித்து நோயை உண்டாக்கும் இதற்கு நறுவல்லி பழத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட வேகத்தை தணிக்கும்.
நறுவல்லி பட்டை சாற்றில் 50 மிலி அளவு எடுத்து அதே அளவு தேங்காய்பால் கலந்து காலை மாலை குடித்து வந்தால் கடும் வயிற்று வலி தீரும்.
இதன் விதையை பொடி செய்து அதனுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தோல் நோய்களுக்கு தடவி வர பலன் கிடைக்கும்.சில ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் தளர்வு ஏற்படும். மேலும் அதிகப்படியான சூட்டினால் கோழை உருவாகி மூச்சியிரைப்பு உண்டாகும். இவர்கள் பழத்தை ஊறுகாய் செய்து சாப்பிட இருமல் தீரும். கோழையை அகற்றி ஆண்மையை பெருக்கும்.
சிலர் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் அருகில் நெருங்கி பேசினால் வாய் நாற்றம் தாங்காது. இவர்கள் வேர்பட்டையை சிதைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி அதில் வாய் கொப்பளித்தால் வாய்துர்நாற்றம், தொழுநோய், தோல்வியாதிகள், உடல்எரிச்சல், மூச்சிரைப்பு, மூட்டுவலி, மண்ணீரல் வீக்கம், வாய்ப்புண், பல்லாட்டம் நீங்கும். இப்பழம் குளுமை குணம் கொண்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதை மருந்தாக எடுத்து கொள்ளலாம். பழத்தை அளவோடு யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதைத்தான்
நறுவிலி யிலைக்கிரைப்பு நாசமவ் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும்- நறுவலியின்
தன்பழமி ரத்தபித்தஞ் சார்மேக முந்தீர்க்கும்
இன்புறயா வர்க்குமிசை’’
என்கின்றது அகத்தியர் குணவாகடம். இனி நரிவல்லி பழத்தை பார்த்தால் மூக்குசளி பழம் என முகத்தை சுளிக்காமல், முன்னோர்கள் வழங்கிய அமுத பழம் என்பதை உணர்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி உடல் நலத்தை காப்போம்.
 
நன்றியுடன் தொடரும். 26-12-2014.
 

கருத்துகள் இல்லை: